25 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 28




தேக பலம், அகிம்சை, பயமற்ற நிலை இவற்றோடு சொந்த கஷ்டங்களைப் பாரட்டாமல் பிறரைக் காக்கும் மனப்பான்மையும் சேர்ந்தால் அது மிகப்பெரிய சீலமாகும். இதற்காக "க்ஷத்ர தர்மம்" என்று முன்னாளில் பெயர் சொல்லப்பட்டது. பிறரைத் தீமையிலிருந்து காப்பதே க்ஷத்ரம். இப்போது நம் நாட்டு இளைஞர்கள் இந்த க்ஷத்ர தர்மத்தை மேற்கொள்வது மிக அவசியமாகிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 27




பண விஷயத்தில் மட்டுமல்ல வார்த்தைகளை உபயோகிக்கும் போதுகூட ஒரு சொல் கூட அதிகமாகப் பேசக்கூடாது. அளவாகக் கணக்காகப் பேசவேண்டும். அதனால், நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும். வளவளவென்று பேசாமல் சுருக்கமாகப் பேசக் கற்றுக் கொண்டால், புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீணாகாது. சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கலாம். திருவள்ளுவரும், எதைக் காக்காவிட்டாலும் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும், என்கிறார்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 26




இப்போது யாருக்குமே நிறைவு இல்லை. சமூக வாழ்கையிலும் பரஸ்பர சௌஜன்யம் போய், போட்டியும், பொறாமையும் வலுத்து விட்டன. ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை ஏற்படத்தானே செய்யும் ! எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது எங்கேனும் சாத்தியமா? ஏமாற்றம் உண்டாகிறது. ஆசை நிறைவேறாவிட்டால் விரோதம் ஏற்படுகிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 25




மக்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள அவசியமானவை எவையோ அவை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும். இவற்றை அரசாங்கமே எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். அதற்குத்தான் திட்டம், ஒழுங்கு எல்லாம் வேண்டும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 24




பொழுதுபோக்கு என்று ருசியாகத் திங்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிறவைகளைப் பார்பதிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும். வாழ்க்கைத் தொல்லைகளிடையே சிறிது உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தவறா என்று கேட்கலாம். நான் சொல்கிறேன் பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்பது தெரியும்.

21 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 23



சத்தியத்தில் ஒருவன் நிலைத்து நின்றுவிட்டால் அவனுக்கு அதனால் தன்னையும் அறியாமலே ஒரு பிரயோஜனம் உண்டு. ஒருவன் சத்தியமே பேசிப்பழகிவிட்டால் முடிவில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும்.  இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லமாட்டான்.

ஆனால், அறியாமையாவோ, தவறுதலாகவோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லிவிட்டாலும், அந்த தப்பே நடை முறையில் சத்தியமாக நடந்துவிடும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 22


சத்தியத்தின் லக்ஷணம், மனமும், வாக்கும் ஓன்றுபட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது வாக்கு. வாக்கு சாந்தமாக இருப்பது தனக்கு சித்த சுத்தியையும், பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது.

14 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 21


சிறு பிராயத்திலிருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அநுஷ்டானங்களை விடாமல் பற்றி ஓழுகி, உத்தமமாக வாழ்கின்ற பெரியோர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நம்முடைய
ஆத்ம க்ஷேமத்திற்காகவே ரிஷிகள் சாஸ்திரங்களைத் தந்தார்கள் என்று விசுவாசத்தை ஏற்படுத்த வேண்டும்.

02 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 20



லட்சியம் லெளகிகமாக மட்டும் இருந்தால் அவ்வப்போது சமூக வாழ்வுக்கான விஷயங்களை மாற்றிக் கொள்ளலாம். 

ஆனால், ஆத்ம க்ஷேமத்தையே லட்சியமாக வைத்து அதற்கு அனுசாணையாக லெளகிக வாழ்க்கைக்கு விதிகள் செய்து தருகிறபோது, இவ்விதிகளை மாற்ற முடியாது.

01 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 19




எனக்கு கனகாபிஷேகத்துக்கும், பீடாரோஹணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி அதற்காகக் கமிட்டி, திட்டம், வசூல் எல்லாம் செய்யுங்கள் என்கிறேன். வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது.

எட்டு வயதிலிருந்து ஆரம்பித்துப் பிறகு, பத்து வருஷங்களுக்கு இளம் பிள்ளைகளுக்கு தினம் ஒரு மணிநேரம் வேத மந்திரங்களிலும், பிரயோகங்களிலும் பேட்டைக்குப் பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு செய்யுங்கள் என்கிறென்.

இதுதான் எனக்கு உண்மையான கனகாபிஷேகம்,  உற்சவம் எல்லாம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 18



அநாதியான வேத தத்துவம் அதன் மூல ரூபத்திலேயே  என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஜோதியை, தீவர்த்தியை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்ற சேவகனாகப் [மஸால்ஜி]

பிராமணன் இருக்க வேண்டும்.  இப்போதுள்ள எல்லாப் பிரஜைகளுக்கும், எதிர்கால் வாரிசுகளுக்கும் இவன் செய்தே தீரவேண்டிய கடமை இது. மற்றவர்களை அதட்டிக் கொண்டு தனக்கு உயர்வு கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்.

சமூகத்தில் வேத விளக்கைப் படித்துக் கொண்டு வழி காட்டுவதற்குத்தான் அது இருக்கிறது. இதை எடுத்துக் கூறவே நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறென்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 17



மனித அறிவின் எல்லையை மீறி அகண்டமாக ஆனவர்களே ரிஷிகள். அவர்களின் மூலமே வேத மந்திரங்கள் உலகிற்கு வந்திருக்கின்றன என்பது அடிப்படைக் கொள்கை. அவர்கள் மந்திரங்களைக் கண்டவர்கள்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 16




பிராமணனின் தேகம் இந்திரிய சுகத்துக்காக ஏற்பட்டதே அல்ல. அது உலக ஷேமத்துக்காக வேதத்தை ரக்ஷிப்பதற்கு என்ன நியமங்களை, அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டுமோ அவற்றைச் செய்யவே ஏற்பட்டது. அதில், அதிகப்படியான எந்த போக்ய வஸ்துவும் சேர்க்கக்கூடாது என்பதே அடிப்படை தர்மம். 

அந்த தர்மத்தை, அதில் உள்ள தியாகப் பண்பை விட்டுவிட்டு நவீன உபகரணங்களால் சுலபத்தில் கிடைக்கிற சுகங்களுக்கு இவன் ஆசைப்பட்டது அடியோடு தவறுதான்.

27 November 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 15


ஹிந்து மதஸ்தர்கள் மிகவும் பெருமைப்பட வேண்டிய அம்சம். இந்த மதம் ஒன்றுதான் தன்னை அனுசரிப்பதின் மூலமே ஒரு ஜீவன் உய்வு பெற முடியும் என்று ஒரு தனி உரிமை கொண்டாடிக் கொள்ளாமலிருப்பதேயாகும். யார் யார் எந்தெந்த சமய மார்க்கத்தில் சென்றாலும், முடிவில் ஒரே பரமாத்மாவிடம் வந்து சேருவார்கள் ஒப்புக் கொள்கிற விசால மனப்பான்மை[catholic outlook ] நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதன் காரணமாகவே பிறரை இந்துவாக மதமாற்றம் செய்ய நம் சாஸ்திரங்கள் இடம் கொடுக்கவில்லை.

தெய்வீகப் பொன்மொழிகள் - 14


மதமாற்றம் செய்கிறவர்களை நாம் கரிக்க வேண்டியதில்லை. அவர்கள் கட்டாயப்படுத்தியாவது, அல்லது, ஆசை காட்டி வசியயப்ப்டுத்தியாவது ம்ற்றவர்களைத் தங்கள் மதத்தில் சேர்க்க நினைப்பதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் மதமே பரம சத்தியம் என்பதில் இருக்கின்ற நம்பிக்கை தானே?

தெய்வீகப் பொன்மொழிகள் - 13


எலலா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டவையே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்கின்றன.  ஒருவரேயான அக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும், அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே,  எவருமே தாங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

தெய்வீகப் பொன்மொழிகள் - 12




ஜகத் முழுவதும் காரணம் - விளைவு - செயல்- பிரதிச் செயல்[Action & Reaction ] என்ற துவந்தத்துக்குள் தான் கட்டுண்டிருக்கிறது. பெளதிக சாஸ்திரம் [Physics] முழுவதும் இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம், ஜீவப்பிரபஞ்சம் இரண்டும் ஒன்றே என்பதை மூலத்திலிருந்தே வந்தால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம்முடைய செயல்களுக்கு எல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அனுபவிக்கிற சுகங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நாம் முன்னவே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நன்மை - தீமைகள் தான்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 11




உலக வாழ்க்கையில் எல்லோருக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் உள்ளவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், அவர்களைக் கேட்டால் தெரியும். அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று நாம் திண்ணையில் இருக்கிறோம், விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடு போய்விடும். அவர்கள் மேல்- மாடியில் இருக்கிறார்கள். விழுந்தால் எலும்பு முறிந்து விடும். பிராணனுக்கே ஆபத்து வரலாம்

18 September 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 10

மனுஷனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டு இருக்கிறான். எதற்காக ? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான்.

வெளியிலிருக்கும் வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை; ஒன்று கிடைத்துவிட்டால் அது போதவில்லை. அதனால், வரும் சுகம் தீர்ந்து போகிறது. மற்றொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத்தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 9

ஒருவருக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதில் வருஷத்திற்க்கு வருஷம் விளைச்சல் அதிகமாகிறது. "இந்த வயல் என்னுடையது" என்பதால் விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவருக்கு மனம் குளிர்கிறது. ஆனந்தம் உண்டாகிறது. பிறகு விளைச்சல் குறைய தொடங்குகிறது. வயலை
வேறு ஒருவருக்கு விற்று விடுகிறார். மறுபடியும் அதே நிலத்தில் விளைச்சல் கூடுகிறது. இப்போது அதைப் பார்க்கும்போது அவருடைய மனம் குளிரவா செய்கிறது?
"அட டா, போன வருஷம் நம்மிடம் இருக்கிறபோது
நிலம் தரிசு போல் பொட்டலாக இருந்தது, இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே"
என்று
வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது.

"எனது" என்ற சம்பந்தம் இருந்த மட்டும்தான், அமோக விளைச்சலால் சந்தோஷம் ஏற்பட்டது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.

08 September 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 8

பைத்தியம் பிடித்த ஒருவனிடம் " இந்தத் தடியை கால்மணிநேரம் பிடித்துக் கொண்டே இரு" என்றால் அவனால் முடியாது. நம்மால் அவ்வாறு செய்ய முடிகிறது. ஆனால், "ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை
நினைத்துக் கொண்டு இரு" என்றால் நம்மால் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப்படங்கள் ஓடுவது போல் ஓட்டமாக ஒடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எவ்வாறு
பைத்தியங்களைப் பற்றி நினைக்கிறோமோ, அதுபோல், மகான்களுக்கு நாம் பைத்தியமாகத்தான் படுவோம்.

05 September 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 7

அகண்டமாக இருப்பவன் ஒருவனே உண்மை.  கண்டமாக இருப்பது வெறும் நினைவுதான்.  நினைவு, கனவு எல்லாம் சாசுவத உண்மை அல்ல.

தெய்வீகப் பொன்மொழிகள் - 6

நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறொம். ஒன்றை ரோஜா என்கிறோம், மற்றொன்றை ஊமத்தை என்கிறோம். ஞானம் என்ற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்த மாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அவ்வாறே தெரியும்.


நமக்கு ஞானம் இல்லாதபடியால், அவைகளை வெவ்வேறாகப் பார்க்கிறோம். உண்மை நமக்கு புலப்படாததற்குக் காரணம் நமக்கு சித்தத்தில் அழுக்கு இருப்பதே.

தெய்வீகப் பொன்மொழிகள் - 5


சக்தியும் பொருளும் ஒன்றே என்று பெரிய உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அந்த அறிவைக்கொண்டு அணுகுண்டு தயாரிப்பைக் கண்டு பிடித்தார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து விஞ்ஞானத்தால் நிலை நாட்டப்படும் அத்வைதம், புத்தி அளவில் நின்றதன் விபரீத விளைவுதான் இது.விஞ்ஞானத்தின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் நிற்காமல் மக்களின் பாவனையிலும் தோயவேண்டும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 4


நாம் செய்யும் கருமம் எப்படிப் பாபமாகிறது என்றால் " நமக்காக" என்று ஆசைவாய்ப்பட்டு ஏதோ ஒரு லட்சியத்தைப் பிடிக்கிறபோது தான், இந்த லட்சியப் பூர்த்திக்காக எவ்வித தவறையும் செய்யத்துணிகிறோம்.

அதனால், சித்தத்தில்  வெறுப்பு, மனப்பான்மை, துக்கம், பயம், இத்தகைய அழுக்குகளை ஏற்றிக்கொண்டு விடுகிறோம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 3

"தனக்கு" என்கிற பெரிய அரிப்பு இல்லாமல், அசூயை, வஞ்சனை எதுவுமே இல்லாமல் காரியம் செய்கிற போதுதான், அக்காரியத்தில் முழு ஈடுபாடு உண்டாகிறது.

04 September 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 2


"பாப சிந்தனைகளைப் போக்குற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம். சேவை மனப்பான்மை,

தியாகம் எல்லாம். இதைப் பொதுவாக அன்பு என்று சொல்லலாம்".

தெய்வீகப் பொன்மொழிகள் - 1


"புண்ய கர்மா என்றால் என்ன? அவரவருக்கும் வேதம் விதித்த கர்மம்தான். லோக வாழ்க்கை சீராக நடக்க வேண்டும். அறிவினால் நடக்கிற காரியம், ராஜாங்க ரீதியில் நடக்கிற காரியம்., சரீர உழைப்பினால் நடக்கிற காரியம் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல் அனுசரணையாக நடந்தால்தான் சமூக வாழ்கை சீராக இருக்கும்".
Related Posts with Thumbnails