இந்த வாழ்க்கையில் நலம் அடையக்கூடிய நிரந்தர செல்வம் பக்தி ஒன்றே. ஆகவே, பாகவதம், புராணம் போன்றவைகளைக் கேட்டு பக்தியை விருத்தி செய்துகொள்ளும் சந்தர்பங்களை நழுவ விடக்கூடாது.
பொருளாதாரத்திற்கான நியதிகள் நாம் வாயால் பேசுவதற்குப் பொருந்தும். கட்டுப்பாடற்று பேசுவது மனஸ்தாபங்களுக்கும், தொல்லைகளுக்கும் வழி வகுக்கும். நமக்கு ஆன்மீக ரீதியில் நன்மை பயக்கக்கூடிய பேச்சாலோ அல்லது பிறர் மனம் நோகாவண்ணம் பேசும் பேச்சாகவோ இருந்தால் நமக்கு ஏற்படும் பல தொல்லைகளைத் தவிர்க்கலாம். இது நம்முடைய செய்கைகளுக்கும் பொருந்தும்.
நாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது. பண்டமாற்று வியாபாரமாகும். நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால் ஒரு நதி சமுத்திரத்தை அண்டும்போது அதன் ஓசையும், வேகமும் அடக்கி சாந்தப்படுவதைப் போல நாமும் சாந்தியைப் பெறுவோம். தனக்கு வெளியிலே, தன்னைத்தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தைத் தேடி அந்த ஒன்றிடம் பக்தி செலுத்துகிறான். தன்னையே ஒருநாள் அறிந்து கொள்ளும்போது தானும் கடவுளும் வேறல்ல ஒன்றுதான் என்ற உணர்வு ஏற்படும்.